தன்மானம் தவிர்....!
முதல் தேதிக்கு
முன்புவரும் ஞாயிறு....
நாயர் கடையில்,
கருவேப்பிலையோடு,
பச்சை மிளகாய்
மசால்வடை வாசனை
கேலி செய்கிறது ....
டீ -
"மூன்று ரூபாய் ஐம்பது பைசாக்கள்"
-பல் இளித்து
நக்கலடிக்கும் ஸ்லேட்டு வாசகம்..!
நண்பர்களைப்போல்,
உயிரில்லா
ஏ.டி.எம் இயந்திரமும்
மதித்து பத்து ரூபாய்
ஓ.டி தர மறுக்கிறது...
"நாயர், பழைய பாக்கியை
கேட்பாரோ?"
பயம் பத்தடிக்கு முன்பே
தடைபோட்டு நிறுத்திவைத்திருக்கிறது ...
அறிமுகமான யாராவது
டீ குடிக்க வரமாட்டார்களா ...?
காத்திருந்தேன் ...!
ஒரு ஜான் வயிற்றின்முன்
எண் ஜானும்
தோற்றுபோயின....!
முதல் தேதி வராமலா
போய்விடும்...?
முதல் தேதிக்கு
முன்பு வரும்
ஞாயிறை சபித்தபடியே ...
"நாயர்..!
நம்ப கணக்கு எவ்வளவு
ஆச்சு பாரு .. ."
சவடால் குரல் கொடுத்தபடியே
ஒரு மசால்வடையை எடுத்து
முனை கடித்தேன்...
தன்மானம்
முதல் தேதிவரை
தள்ளியே
நிற்கிறேன் என்றது ...!