நன்றி தினமலர் வாரமலர் 17/07/2011
இடுகாட்டில் காத்திருப்பேன் ....!
என்னைக் கொண்டே
என் மூளை
செல்களுக்குள்
உன் பெயரை
பச்சை குத்திக் கொண்டவளே...
உன்னுள் கரைந்து
உன் காதலில் நான்
தாய்மை அடைந்தேன்!
என் மனம்
உன்னால் குப்பையாய் போனதால்,
நீ தீண்டி குப்பையில்
போட்டவைகள் எல்லாம்
பொக்கிஷமாய் என் அறையில்!
சிவந்து சிரிக்கும்
முற்றத்து ரோஜா...
தாவி ஓடும்
கொல்லைப்புற அணில் குட்டி...
ஒவ்வொரு நிகழ்வும்
நொடிக்கொரு தரம்
உன் நினைவுகளை
என்னுள் புதுப்பித்துக் கொண்டே
இருக்கிறது!
எல்லா பெண்களையும்
போல் தானே நான்,
என்னிடம் புதுமையாய்
எதை கண்டாய்
என ஏளனமாய் கேட்டாய்!
பிரியமே...
என்னை உன்னில்
மட்டும் தானே காண முடிகிறது!
வாழும் போது ஒருவராய்
வாழும் நாம்...
மரிக்கும் போது மட்டும்
நான் சிறிது
முந்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்!
உனக்கு முன்
நான் மரித்து,
மக்கி, மண்ணாகி
உன்னை மலர் போல்
தாங்க,
இடுகாட்டில் காத்திருப்பேன்!