Pages

Posted on: Friday, November 23, 2012

என் முதல் காதலியை இழந்து விட்டேன் …..



வயசாயிட்டாவே …. இனி புரோயோஜனம் இல்லன்னு தெரிஞ்சிட்டா … கூடவே, மேனா மினுக்கியா ஒருத்தி வந்துட்டா … அது வரை கை கோர்த்து கூட வந்தவளை அப்படியே விட்டுட்டு போறதுதானே மனித கூட்டம்..? நான் மட்டும் விதிவிலக்கா என்ன…?

என் காதலியை பிரியும்படியா ஆயிடிச்சு.  அதுவும் பதினோரு வருசமா … என் கூட இளைச்சிக்கிட்டு வந்தவள … என் மனைவி கூட எனக்காக இப்படிலா கஸ்டப்பட்டதில்ல .... 

நான் மழைல நனையும்போது நனைந்து, வேகாத வேயில்ல எனக்காக வாசல்லயே காத்து கிடந்து, என்னை பார்த்த மாத்திரத்துல அதுவரை பட்ட கஸ்டத்தை எல்லாம் மறந்துட்டு காதலோட ஒரு 'லுக்' விடுவா பாருங்க … அது வரை ஆபிஸ்ல இருந்த டென்சன்லா ஒடிபோய் அப்படியே ஜில்லுன்னு ஆயிடும்.  அப்படியே பாசத்தோட அவள வருடிக்கிட்டே, ஆபிஸ் விசயத்தலா அவாகிட்ட சேர் பண்ணிக்கிட்டு வீடு வந்து சேர்ரது …நாளைக்கான புதுவேகத்தை கொடுக்கும்! 

காதலை வேற யாரும் எனக்கு இப்படி காதலோட. தாய் பாசத்தோட சோல்லி கொடுத்தது இல்லை….

மனசே கேக்கல. அவளை அப்படியே அங்க விட்டுட்டு, புது மேனா மினுக்கியோட வெளிய வரும் போது…. தானே தன் கனவனுக்கு ரெண்டாவது திருமணம் செஞ்சிவச்சிட்டு அவங்க ஜோடியா வெளிய போகும் போது வழி அனுப்பிவைக்கிற மனைவி மாதிரி … என்னை பார்த்து 'வுட்டுட்டு போறீயா?' ன்ற மாதிரி ஒரு லுக் விட்டா பாருங்க பச்! என் உயிர் என்கிட்டயே இல்ல …

சந்தோசமோ, கோபமோ முதல்ல அவக்கிட்டத்தான் காட்டியிருக்க … அதுக்காக அவா ஒருவாட்டி கூட மொகத்த காட்டுனதுயில்ல … 'கௌம்பு'ன்னா போதும் சந்தோசமா கௌம்பிடுவா …

என் மகன் எனக்குமேல 'பீல்' பண்ணி அவளை கெட்டிபிடிச்சு கிஸ் பண்ணிட்டு, மனசே இல்லாம வந்தான்.

"இதுக்கு மேல இதை ரிப்பேர் பார்க்க முடியாது சார்"ன்னு மெக்கானிக் சண்டைக்கு வந்த பிறகு, வேற வழியே இல்லாமத்தான் என் பழைய டி,வி,எஸ் விக்டரை கொடுத்துட்டு புது டூ வீலர் வாங்கும்படியா ஆயிடிச்சு. 

புது காதலிபுது நட்பு!! ஆனாலும் முதல் காதலை மறக்க முடியாமல்....

Posted on: Tuesday, November 13, 2012

கந்தக தீபாவளி ...!




பட்டாசு வெடித்து

தீபாவளி கொண்டாடுங்கள்...!


பட்டாசு சத்தம்

கந்தக பிஞ்சுக்களின்

கால் வயிற்று கஞ்சி...!


கந்தக கிடங்கில்

கருகிய மொட்டுக்களின்

பச்சை இரத்த வாசம்...


மகரந்த கனவுடன்

மொட்டோடு கருகிய

எதிர்கால....

மருத்துவர்...!

பொறியாளர்...!

விஞ்ஞானி ....!


கந்தக குளத்தில்

தன் சந்ததியாவது

மலரும் என்ற நம்பிக்கையில்,

பல செடிகள்

தலைமுறை,

தலைமுறையாய்.....

மலடாய்...!
 
விடிந்தால்

தீபாவளி....

எங்களுக்கும் தான்....!

கந்தகம் வெடித்து

சிதறும் சத்தத்தில்

எங்கள்

வயிறு சிரிக்கும்...!


கங்கா ஸ்நானம்

செய்யாவிட்டாலும்

கங்கைக்கு ஒன்றும்

பாதகமில்லை....


பட்டாசு சத்தம்

உங்களுக்கு வேடிக்கை...!

எங்களுக்கு

கால் வயிற்று கஞ்சி...!


அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

Posted on: Monday, November 12, 2012

இது மக்களுக்கான அரசு என நிருபித்த அதிகாரிகளுக்கு, இணைய எழுத்தாளர்களுக்கு நன்றி! நன்றி!!!!



21/10/2012 அன்று எனது வலைப்பூ,முகநூல் மற்றும் டிவிட்டரில்( http://nellaikavisasaravanakumar.blogspot.in/2012/10/blog-post_21.html )  மக்களாட்சி ... இது மக்களுக்கான ஆட்சி ????? என்ற தலைப்பில் சென்னை அருகே பட்டாபிராமில் பொதுமக்களுக்கு பயன்படும் ரேசன் கடை போதிய பாதுகாப்பற்ற முறையில் புதர்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதை வேதனையோடு வெளியிட்டிருந்தேன்,
 அதை கண்றுற்ற பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக அக்கடையை சி.டி.எச் சாலையில் மாற்றி அது உடனடியாக செயல்படவும் உத்தரவிட்டிருந்தனர்,
இது இணைய எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெற்றி,
எனது இடுக்கையை தங்களது வலைப்பூ,முகநூல் மற்றும் டிவிட்டரில்  பகிர்ந்து இவ்வளவு பெரிய சாதனைக்கு துணையிருந்த அனைத்து இணைய ஏழுத்தாளர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!!!


Posted on: Sunday, October 21, 2012

மக்களாட்சி ... இது மக்களுக்கான ஆட்சி ?????

மக்களாட்சி ... இது மக்களுக்கான ஆட்சி ?????

Posted on: Wednesday, October 17, 2012

கண்ணீரின் சிரிப்பு ....!

 

 

 

 

 

 

 பாஞ்சாலியின் அவமானம்

மகாபாரதம்...!

சீதையின் வேதனை

இராமாயணம் ....!

அடிமை வாழ்வின்

கண்ணீர் துளிகள்

சுதந்திர தீ .....!

வலிகள் இல்லாமல்

காயங்கள் இல்லை ...!

காயங்கள் இல்லாமல்

மிதி வண்டி கூட

பழக முடியாது ....!

பாறைகள் தொழப்பட

வேண்டுமானால்,

உளியின் வலி

பொருத்துத்தான் ஆக வேண்டும் ....!

தீயினால் சுடப்படாமல்

தங்கத்தை பட்டை தீட்ட

முடியாது ....!

தோழா ...!

நீ மட்டும் என்ன

விதி விலக்கா ...?

வெத்து ஏட்டில்

மாங்காய் அறுவடை

செய்ய ....?

ஏர் பிடிக்கும் கரங்களும்,

இரும்படிக்கும் தோள்களும்

வாழ்வின் ஆதாரம் ...!

வாழ்வின் சுவராஸ்யம்

பசி ….!

பசியின் போராட்டம்

உழைப்பு ....

உழைப்பின் பயன்

உயர்வு ....!

போராட்டத்தை நேசிக்க

கற்றுக்கொள் ....

உன்னை நாளைய

உலகம் நேசிக்கும் ....!

Posted on: Thursday, August 9, 2012

மரண சுகமடி நீ எனக்கு ....!



மரண சுகமடி நீ எனக்கு ....!

மாம்பழத்து வண்டைப்போல்
தடம் காட்டாமல்
உள் புகுந்தவளே ....!

வண்டைப்போல் உயிர்
குடிக்கிறாய் ...
உயிர் குடிக்கும்  அந்த
மரண சுகம் வேண்டி
போதை வஸ்த்து அடிமையைப்போல்
உன்னை தேடுகிறேன் ...

எனது ஒவ்வொரு
கணமும் உன் நினைவுகளால்
நிறைந்த்திருக்கிறது ...

நீ நிறைந்திருக்கும்
எனது கணங்கள்
என்னை வாழ தூண்டுகின்றன ....!

உறங்கப் போனால்
கனவில் நீ வருவாய்
என விழித்திருத்தலும் ....

தெருவில் நீ வருவாய்
என உறங்கப்போவதும் ...

மரணத்திற்கும்
வாழும் ஆசைக்கும்
இடைப்பட்ட  மரண சுகமடி
நீ ...!

காதல் ஒரு  ...
காதுகளற்ற ...
கண்களற்ற ..
மூளையற்ற  மாற்றுத்தினாளி ...!

வாழ்கை என்பது
வாழ  ஊக்கமளிக்கும்

ஊன்று கோள் ...!


ஊன்று கோளாய்
நான் உனக்கும் ...
நீ எனக்கும் ...!
இறுதிவரை
துணைபோவோமா ...?

Posted on: Monday, May 14, 2012

குங்குமம் வார இதழில் இரும்பு இதயம்

நன்றி குங்குமம்05/03/2012




Posted on: Monday, March 5, 2012

தினமலர் வாரமலரில் நாளை என்பது ...






நாளை என்பது ...




 நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும் நம்பிக்கை!

இன்றைய பசியை,
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது...
ஆனால்,
நம்பிக்கையூட்டும்!

நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட,
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது!

நாளைய நம்பிக்கைதான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து!

நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன்!

நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு!

அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை!

மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ, உனக்கு சுமையாகக் கூடாது!

அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம் என்ற
நம்பிக்கைதான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரையீரல்
நிறைக்கிறது!

நம்முன், தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயிரோடு இருந்து
உண்ணப் போகிறோம்
என்ற நம்பிக்கையின்
வெளிப்பாடு!

வா... நாளையை
ஒரு கை பார்ப்போம்...
உள்ளர்ப்பணத்தோடு
உழைப்போம்!

நாளை - உன் வீட்டு
வேலைக்காரனாகும்!

நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும்
நம்பிக்கை பசை!

Posted on: Monday, January 30, 2012

தினமலர் வாரமலரில் ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!

நன்றி தினமலர் வாரமலர் 30/01/2012






ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!





அகிம்சையை போதித்தவனுக்கு,
நெஞ்சில் துப்பாக்கி ரவையை
பதக்கமாய் அணிவித்து,
ஓட்டுப் போட பணம்
பெற்றுக் கொள்கிறோம்!

'ஜாதிகள் இல்லையடி பாப்பா'
என்றவனின் நினைவு நாளில்,
அவனின் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்த கையோடு
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு
உடன்படுகிறோம்!

செக்கிழுத்து பெற்ற
சுதந்திரத்தை
டாஸ்மாக்கில் தேடுகிறோம்!

வெள்ளையன்,
"அவுட் ஆப் பேஷனாய்' போனதால்,
ஏமாற்றுக்காரர்களின் வெள்ளை உடை
பேஷன் ஆனது!

அடிமைத் தனத்தையும்,
சுகமான சுமையாகவே
அனுபவிக்க கற்றுக் கொண்டோம்!

எங்கள் உரிமையை
நாங்கள் விட்டுக் கொடுப்பதும் இல்லை...
பணமாகவோ, மூக்குத்தியாகவோ
கொடுத்தால் மட்டுமே ஓட்டு!

மகாத்மாவே...
பாரதியே...
தயவு செய்து மீண்டும்
வந்து விடாதீர்கள்!

எங்களுக்காக நீங்கள்
சிந்தும் ரத்தத்தை கூட,
"என்ன குரூப்' என வகை பிரித்து
காசாக்கி விடுவோம்!

கோவணம் போதும் என்றால்
மேலாடை எதற்கு என்று
உருவி விடுவோம்!

உங்களிடம்,
எங்களை மன்னிக்கும்படி
கேட்க எங்களுக்கு தகுதியில்லை!

எங்களை திருத்த
இனி நீங்கள்
கைத்தடியை தூக்கிப்பிடித்து
வந்தால் மட்டும் தான்
முடியும்...
வருவீர்களா? 
 
Tweet