Pages

Posted on: Monday, January 30, 2012

தினமலர் வாரமலரில் ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!

நன்றி தினமலர் வாரமலர் 30/01/2012






ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!





அகிம்சையை போதித்தவனுக்கு,
நெஞ்சில் துப்பாக்கி ரவையை
பதக்கமாய் அணிவித்து,
ஓட்டுப் போட பணம்
பெற்றுக் கொள்கிறோம்!

'ஜாதிகள் இல்லையடி பாப்பா'
என்றவனின் நினைவு நாளில்,
அவனின் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்த கையோடு
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு
உடன்படுகிறோம்!

செக்கிழுத்து பெற்ற
சுதந்திரத்தை
டாஸ்மாக்கில் தேடுகிறோம்!

வெள்ளையன்,
"அவுட் ஆப் பேஷனாய்' போனதால்,
ஏமாற்றுக்காரர்களின் வெள்ளை உடை
பேஷன் ஆனது!

அடிமைத் தனத்தையும்,
சுகமான சுமையாகவே
அனுபவிக்க கற்றுக் கொண்டோம்!

எங்கள் உரிமையை
நாங்கள் விட்டுக் கொடுப்பதும் இல்லை...
பணமாகவோ, மூக்குத்தியாகவோ
கொடுத்தால் மட்டுமே ஓட்டு!

மகாத்மாவே...
பாரதியே...
தயவு செய்து மீண்டும்
வந்து விடாதீர்கள்!

எங்களுக்காக நீங்கள்
சிந்தும் ரத்தத்தை கூட,
"என்ன குரூப்' என வகை பிரித்து
காசாக்கி விடுவோம்!

கோவணம் போதும் என்றால்
மேலாடை எதற்கு என்று
உருவி விடுவோம்!

உங்களிடம்,
எங்களை மன்னிக்கும்படி
கேட்க எங்களுக்கு தகுதியில்லை!

எங்களை திருத்த
இனி நீங்கள்
கைத்தடியை தூக்கிப்பிடித்து
வந்தால் மட்டும் தான்
முடியும்...
வருவீர்களா? 
 
Tweet