Posted on: Tuesday, May 28, 2013
தோள் தருவாயா .....?
தோள் தருவாயா .....?
நானறியாமல்
என்னுள் முழுமையும்
நிறைந்தவளே ...
நீ நிறைந்திருக்கும்
எனது கணங்கள்
என்னை எனக்கு
அடையாளப் படுத்துகின்றன ...!
பூ விழுந்தால்
நீ ஜெயித்தாய்
தலை விழுந்தால்
நான் தோற்றேன் ...
நீ விளையாடும் புதிரான
காதல் விளையாட்டு ....
உன்னைப் பார்த்த
கண்களால் எதைப்பார்த்தாலும்
அழகாய் தெரிகின்றன ...
நான் உள்பட ....!
மரணத்திற்கும்
வாழும் ஆசைக்கும்
இடைப்பட்ட மரணசுகம்
உனக்காக காத்திருக்கும்
நொடிகள் ....!
ஊர் கூடி தேர் இழுக்க
நாம் கண்களால்
ஒருவரை ஒருவர்
இழுத்துக்கொண்டோம் ....
புளி மாங்காய்
தேமாங்காய் ...
ஆசிரியர் பாடம் நடத்தும் போது,
எனக்கு நீ கடித்து கொடுத்த
மாங்காய் தான் இலக்கணமாய்
தெரிந்தது .....
இவை எல்லாம்
நேற்று வரை நடந்தவைகள் ....
காதல்
கற்பனையானது ...
அழகானது ....
காதல் மட்டுமாயின்,
காதல் சுகம் ....!
அடுத்த பரிணாமம்
நிஜம் ....!
சுற்றம்
பொருளாதாரம்,
வகுப்பு வாதம் பேசும் ...
சரி .. நமக்கு நாமே
துணையென உறவு பகைத்து
வாழ்கை நடத்தகூட
பொருளாதாரம் அதிமுக்கியம் ....!
அதனால் ,
காதலை நம்முள்
பகிர்ந்துக் கொள்ளும் முன்
சுயகாலில் நின்று ...
நம் வெற்றியை உன்
கன்னங்களுடன் கொண்டாட
விரும்புகிறேன் ...
அதுவரை,
என் உயிர் குடிக்கும்
மாயக்காரியே ....
நான் துவண்டு விழும்
பொழுது எல்லாம்,
உன் பார்வையால்
எனக்கு தோள் தருவாயா ....?
0 comments:
Post a Comment